சிறுகதை 5 : ரப்பர் வளையல்கள் – சிவஷங்கர் ஜெகதீசன்
டிபிஐ வங்கி, செனாடாஃப் ரோடு.
காலை மணி 11.
வங்கி மேலாளர் ராஜாராமன் துணை வங்கி மேலாளர் ரவியுடன் மீட்டிங்கை முடித்தார். அதற்கு முன் வாராக் கடன்கள் பற்றிய மீட்டிங் Regional Manager, Zonal Manager களோடு நடந்திருந்தது.
போனை எடுத்த ராஜாராமன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தியை அழைத்தார்.
‘சார். சொல்லுங்க..எப்படி இருக்கீங்க?’ என்றார் விநாயகமூர்த்தி.
‘ஃபன் சார். நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும்’
‘சொல்லுங்க’

‘அன்புன்னு ஒரு கிரானிக் டீஃபால்டர். 6 லட்சம் வாங்கிட்டு, முதல் நாலு மாசம் தான் இன்டெரெஸ்ட் பே பண்ணினார். அதுக்கப்புறம் தேடி பிடிக்கறதே எங்களுக்கு பெரிய வேலையா இருக்கு.நீங்க தான் விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிக்கணும்’
‘அப்படியா. ஒண்ணும் பிரச்சனையில்லை. நீங்க டீடெயில்ஸ் அனுப்புங்க. கூப்பிட்டு விசாரிக்கறேன்’.
அன்பு என்னும் அன்பழகன் தான் இந்த டிபிஐ வங்கியில் கடன் வாங்கியது. டூவீலர் மெக்கானிக்கான அன்பழகனின் தொழில் வருடா வருடம் பின்னோக்கி போய்க்கொண்டிருந்தது.
போலிஸ் விசாரணை அளவுக்கு வருவதற்கு முன் கஸ்டமர் கேர், பேங்க் அதிகாரிகள், ரிகவரி ஏஜெண்ட்கள், என ஒரு ஊரே கால் செய்து அன்பழகனை ட்யூ கட்ட சொன்னது.
பணம் இருந்தால் தானே கட்டுவது? வாங்கிய ஆறு லட்சம் எப்படி கரைந்ததென்றே ஞாபகமில்லை அன்புக்கு. வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கியது போக கூடுவாஞ்சேரி அருகே ஒரு நிலம் மனைவியின் பெயரில் வாங்கியது ஞாபகம் இருந்தது.
எதிர்பாராமல் நடந்த விபத்தொன்றில் அடிபட்டு கீழே கிடந்த போது, அருகிலிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்க கை, கால்களில் ஏற்பட்ட அடிக்கு செய்த செலவே ₹2 லட்சம் ஆனது. ஒரு ஐம்பதாயிரம் மனைவியின் தங்கை திருமணத்துக்கு கொடுக்க வேண்டியதாகி விட்டது.
இப்போது கொரோனா காலத்தில் மாதம் ₹ 10000 வருவதே பெரிய விஷயம் என்றிருக்கும் போது எங்கிருந்து ₹ 13000 வட்டி கட்டுவது?
ஓடி ஒளிந்தான் அன்பு. மொபைல் நம்பர் மாத்தினான். வாடகை வீட்டை மாத்தினான். வொர்க்ஷாப்பையும் மாத்தினான்..ரிகவரி ஏஜெண்ட்ஸ் விடுவதாக இல்லை. தொடர்ந்து வந்தனர்.
கான்ஸ்டபிள் ரஞ்சித், பாபு அன்பின் மெக்கானிக் ஷாப்பிற்கு மதியம் 1 மணிக்கு வந்தனர். டிபன் பாக்ஸ் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அன்பு.
‘நீ தானே..அன்புங்கறது?’
‘ஆமாங்க’
‘உன்னை இன்ஸ்பெக்டர் அழைச்சுட்டு வர சொன்னார்’
‘எதுக்குங்கய்யா?’
‘லோன் வாங்கினல்ல… ஒழுங்கா கட்டினியா?’
‘வருமானமே இல்லாத போது லோன் எப்படிங்கய்யா கட்ட முடியும்? கொஞ்சம் டைம் கேட்டுருக்கேன்யா…பேங்க்ல’
‘ஸ்டேஷனுக்கு வா பேசிக்கலாம்’
சரிவர சாப்பிடாமல் கிளம்பினான் அன்பு.
இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி காசோலை மோசடி புகார் அன்பு மேல் அளிக்கப்பட்டிருப்பதை விளக்கினார்.
‘ ஐயா..நான் செக்குலாம் யூஸ் பண்றதே இல்லிங்கய்யா.’
‘பெர்சனல் லோன் வாங்கறப்போ..செக்ல கையெழுத்து போட்டு கொடுத்தேல்ல…அதான் கேஸு’
வங்கிகள் ஒருவருக்கு கொடுத்த கடனுக்காக கைது செய்ய புகார் கொடுக்க முடியாது. அதனால் ஒவ்வொரு கடன் கொடுக்கும் போது உஷாராக 10 காசோலைகளில் கையெழுத்து வாங்கிக் கொள்வார்கள். பிற்காலத்தில் கடன் வாங்கியவர் கடன் கொடுக்காத போது செக் மோசடி என்றே வழக்கு பதியப்படும்.
செக் மோசடி என்பது சீட்டிங் கேசாகும்.
அன்பிற்கு செக்குகளில் சைன் செய்தது ஞாபகத்துக்கு வந்தது.
‘கடன வாங்கிட்டு..அத சரியா கட்டாம..வருமானம் இல்ல, செக் யூஸ் பண்றதில்லன்னா சொல்ற…’ என்ற ரஞ்சித் லட்டியால் சரமாரியாக அன்பை தாக்கினான்.
பாபு அன்பின் சட்டை, பேன்டை கழட்டச் சொன்னான்.
அதன் பிறகு 20 நிமிடம் சரமாரியாக தாக்கினார்கள்.
அன்பின் வாயில் ரத்தம் கொட்டியது. முதுகில் வாங்கிய அடியில் தோலுரிந்து போயிருந்தது. கனுக்கால் ரத்தம் கட்டி போயிருந்தது.
விஷயம் தெரிந்து அன்புவின் மனைவி தனம் போலிஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்தாள்.
அன்பின் கோலத்தை பார்த்து அவ ஆரம்பித்தாள்.
‘நாளைக்குள்ள ஒரு மாச ட்யூவ கட்டிர்றோம், அவர விட்ருங்கய்யா’ என விநாயகத்திடம் கெஞ்சினாள்.
‘என்னடா…நாளைக்குள்ள ட்யூவெல்லாம் கட்டிடறியா?’ விநாயகம் கேட்டார்.
அன்பழகனின் பதிலில்லை. ஏழைகளின் சொல்லுக்கு மதிப்பேதுமில்லை. ரப்பர் வளையல்களுக்கு சத்தமிட வாயில்லை. அன்பு அமைதியாகவே இருந்தான்.
‘கண்டிப்பா என் செயின வித்து ஒரு ட்யூ கட்டிறங்கய்யா…அவரு மாசா மாசம் பேங்க் போய் சரியா ட்யூ கட்டிடுவாருய்யா’ தனம் கெஞ்ச ஆரம்பித்தாள்.
அன்பு வாயே திறக்காததால் இன்னும் நாலு அடி விழுந்தது. இன்ஸ்பெக்டர் கேட்கராரில்ல..பதில் பேச மாட்ட…என்று ரஞ்சித் இழுத்து ஒரு அறை விட்டான்.
‘சரி கூட்டிட்டு போ. நாளைக்கு ட்யூ கட்டளைன்னா..வேற மாதிரி ஹேண்டில் பண்ண வேண்டியிருக்கும்’ விநாயகமூர்த்தி எச்சரித்தார்.
அன்பழகனால் எழுந்திருக்க முடியவில்லை. தனம் கைத்தாங்கலாக அவனை கூட்டிப் போனாள்.
ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றார்கள். வழி முழுவதும் வலியால் கதறினான் அன்பு.
மூக்குத்தி, குழந்தைக்கு வாங்கிய செயின், பரிசாக வந்த லட்சுமி காசு என மூன்று பொருள்களை விற்பதற்கு எடுத்து வைத்திருந்தாள் தனம்.
காலை எழுந்தவுடன் முதல் வேலையாக சேட்டுக்கடையில் விற்று அந்த பணத்தை பேங்கில் கட்டத் தயாரானார்கள். இவர்கள் இவற்றை விற்றால் ₹15000 வரும் என எதிர்பார்க்க சேட் கொடுத்ததோ ₹ 11000.
ஒரு மாத ட்யூ ₹13000, அதற்கே இரண்டாயிரம் குறைந்தது. பக்கத்து வீட்டு காமாட்சி அக்கா ₹2000 கொடுக்க அன்பும், தனமும் வங்கிக்கு சென்றார்கள்.
அன்பு வால் வங்கியில் நிற்க முடியவில்லை, வாங்கிய அடியில் ரத்தம் கட்டிப்போய் காலெல்லாம் பயங்கர வலி. தனம் தான் இரவு முழுவதும் எண்ணேய் தேய்த்து நீவி விட்டாள்.
2 மணி நேர காத்திருப்பிற்கு பின் அன்பு அழைக்கப்பட்டு ராஜாராமன் முன் அமரவைக்கப்பட்டான்.
‘இனிமே, இந்த மாதிரி போன் மாத்திட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு நினைக்காதீங்க’ என மேலாளர் ராஜாராமன் அறிவுரை வழங்கினார்.
அன்புக்கு செம கோபம் வந்தது.
‘இதுவே ஒரு கோடீஸ்வரனாயிருந்தா….கடன் வாங்கிட்டு நாட்டை விட்டு ஓடிடுவான். அவன் கடனையெல்லாம் தள்ளுபடி பண்ணிடுவீங்க…இதே ஏழைங்கன்னா…அவன போலிஸ் விட்டு அடிக்க வைப்பீங்க…என்னங்கடா…டேய்’. என்று நினைத்துக் கொண்டான் அன்பு.
அன்பைப் போலவே பல பேருக்கு கடன் வழங்கும் வங்கிகள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தாலும் “பாதுகாப்பில்லாத கடனாகவே ” நமக்கு அளிக்கின்றன.
Collateral, Security என்பதெல்லாம் ₹ 5 கோடிக்கு மேற்ப்பட்ட கடன்களுக்கு கிடையாது. ₹ 5 லட்சம் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே Collateral, Security, அடையாள ஆவணங்கள், Cheque Slips வாடிக்கையாளரிடம் வாங்குவது போன்றவை கடைபிடிக்கப்படுகிறது.
காத்திருந்த 2 மணி நேரத்தில்..அன்பு இந்த கேடுகெட்ட உலகில் உண்மையாக உழைப்பவனுக்கு மதிப்பு இல்லை. பித்தலாட்டம் செய்பவர்களுக்கே வங்கிகள் முன்னுரிமை வழங்குவதை உணர்ந்தான்.
தனம் கேஷ் கவுண்டரில் பணம் கட்டி ரசீது பெற்றாள். அன்பு கைத்தாங்கலாக அவளுடன் வெளியே வந்தான்.
அப்போது ஓர் BMW கார் வந்து அன்பின் முன் நின்றது. அதிலிருந்து இறங்கிய அஜய் மல்லையாவை மேனேஜர் ராஜாராமன் வரவேற்றார்.
அஜய் மல்லையாவுக்கு எந்த விதமான Collateral, Security இல்லாமல் ₹ 200 கோடி லோன் அப்ரூவாகி இருந்தது.
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.
அருமையான கதை . அப்பட்டமான உண்மையை அழகாக எழுதியிருக்கிறாய் .
LikeLike
நன்றி மண்ணி.
LikeLike