தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் ஊர்களில் வாழும் தொழிலாளர்களின் வாழ்க்கையை அப்படியே கண் முன் காட்டியுள்ளது இந்தப்படம்.
இந்தப்படம் தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய படம்.
ஏலத்தோட்ட தொழிலாளர்கள் மலைகளில் ஏலக்காய் மூட்டைகளை சுமந்து செல்லும் காட்சிகள், மலைகளில் வாழும் யதார்த்த மனிதர்கள், நிலம் வாங்கி விவசாயம் செய்ய முயற்சிக்கும் கதையின் நாயகன் ரெங்கசாமி,
சிறுகடைகள் மலைகளில் நடத்தி வரும் பாக்கியம்மாள், மெட்டு என்கிற மலையில் தேநீர் கடை நடத்தி வரும் பெரியவர், கங்காணி,ஊத்துராசா, Chacko என அனைத்து கதாபாத்திரங்களும் அந்த ஊரில் வசிப்பவர்களாகவே வாழ்ந்துள்ளனர்.
7 ஏலமூட்டைகளை 7பேர் தூக்கிக்கொண்டு மலை மேல் செல்லும் காட்சிகள் Helicam Shot களில் கண்களுக்கு கவிதையாக தெரிகிறது.
கிராமத்து பெரியவர்கள் பேசும் வசனங்களில் அப்படியொரு யதார்த்தம்.
இயக்குநர் லெனின் பாரதி காட்சிகளிலேயே மலையோர கிராமத்து வாழ்வியலை புரிய வைக்கிறார். வசனகர்த்தா ராசி. தங்கதுரை வசனங்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மண் மணம் மாறாமல் உயிர் கொடுத்திருக்கின்றன.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.
தன் வேட்டியை தன் நிலத்தில் உள்ள மரத்தின் கிளையில் கட்டி விட்டு , மலை உச்சிக்கு சென்று தன் நிலத்தை நாயகன் தன் மகனுக்கு காட்டுவது அருமையான காட்சி.
அந்தக் காட்சியின் தொடர்ச்சியாக தான் வாங்கி வந்த ஏலக்காய் மூட்டை மலையில் இருந்து விழுவது தன் கனவ நிலம் தொலைந்தது போல நாயகன்,நாயகி நடிப்பு அருமை.
#ராகதேவன் #இசைஞானி இளையராஜாவின் இசையில் முதல் பாதியின் பின்னனி இசை Class.
இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும் கொஞ்சமும் அலுக்காமல் படத்தை செதுக்கியுள்ளனர்.
அந்த நாயகனை படம் முழுக்க கைலி கட்டம் போட்ட சட்டைகளில் பார்த்துவிட்டு திடிரென Security உடையில் பார்ப்பது நமக்கே ஒரு நொடி சங்கடமாக இருக்கிறது. அந்த உடை அவருக்கு பொருந்தவும் இல்லை. நம்மாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கங்காணி குழந்தைகளை விரட்ட இரண்டிரண்டு கொய்யாபழமாக எறிவது, கழுதைகளை மலை மேல் ஏற்றிக்கொண்டு செல்லும் முதியவர், பாக்கியம்மாள், மீராத்தான், கணக்குபிள்ளையாக வருபவர், Chacko, ஆறுபாலா என அனைவரும் மலையோர வாழ்க்கையை கண் முன் நிறுத்துகிறார்கள்.
மறக்க முடியாத அனுபவம் மேற்கு தொடர்ச்சிமலை. A Gem of Tamil Cinema.